tamilnadu

img

உலக சந்தையில் முதலீடு அதிகரிப்பால் தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னை,ஆக.6- தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செவ்வாயன்று பவுனுக்கு  104 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன்  27 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்த தங்கத்தின் விலை 27 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உயரத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையும் பவுனுக்கு 264 ரூபாய் அதிகரித்து தங்கம் ஒரு பவுன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமின்றி தங்கம் விற்பனையானது. ஆனால் மீண்டும் திங்கட்கிழமை பவுனுக்கு 352 ரூபாய் உயர்ந்தது. திங்களன்று ஒரு பவுன்  27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத்தங்க விற்பனையிலேயே இவ்வளவு அதிக விலைக்கு தங்கம் விற்பனையாவது இதுவே முதல் முறை என்றும்  உலகசந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். உயர்ந்து வரும் தங்கம் விலை சாதாரண, நடுத்தர மக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.